Thursday, 6 August 2015

கொங்க நாவிதன் வரலாறு


மங்கலன்

வெள்ளாள வம்சத்தவர்களுக்கு சகல நிகழ்ச்சிகளிலும்,முன்னின்று கூறுவதும்,சவரத்தொழில் புரிபவனுமான இக்குடிமகனின் ஆதிவம்சம்
நம் வேளாள மரபே.

வெள்ளாளன்+செட்டி=வெள்ளாஞ்செட்டியில் இருந்து உருவானதே.
பெருங்குடி கூட்டத்தில் பிறந்த வாழிபுல்லாக்கவுண்டருக்கு நான்கு ஆண்மக்கள் இருந்தனர்,

ஒருநாள் வாழிபுல்லாக்கவுண்டருக்கு,வேட்டுவநாவிதன் ஒருவன்
முகச்சவரம் செய்துகொண்டிருக்கும் போது,அவ்வூர்த் தலைவனான வேட்டுவக்கவுண்டன் குதிரை ஏறித் தன் தோட்டத்திற்கு வாழிபுல்லாக்கவுண்டர் வீட்டுவழியாகச் சென்றார்.
அவரைக்கண்ட நாவிதன்  எழுந்து வணங்க அவர் வாப்பா என்று கூறிவிட்டுத் தன் தோட்டத்திற்குப் போய்விட்டார்.
நாவிதன் தன்னை வேட்டுவக்கவுண்டர் ஏதோ வேலையாக கூப்பிடுகிறாறென்று நினைத்துப் பாதிசவரத்துடன் அவரை அப்படியே விட்டுவிட்டுத் தலைவனைப் பின்தொடர்ந்து தோட்டத்திற்குச் சென்றான். வாழிபுல்லாக்கவுண்டன் வெகுநேரம் வரை நாவிதனைப் பார்த்தும்,அவன் வராமையால் அதிகவிசனமுற்றுத் தன்மூத்தமகனாகிய நல்லதம்பிக்கவுண்டனை அழைத்து நடந்தைக்கூற அவன் தந்தையைப் பார்த்து அண்ணா பயப்படாதீர்கள் அவன் வைத்துவிட்டுப்போன சவரக்கத்தியை எடுத்து சவரத்தை முடிக்கிறேன். 
என்றுகூறி அக்கத்தியை எடுத்துப்பாக்கிச் சவரத்தைப் பூர்த்தி செய்தான். ஊர்த்தலைவனை நாவிதன் தோட்டத்தில் வந்து வணங்க ஏண்டா நான் வரும்பொழுது வாழிபுல்லாக்கவுண்டருக்குச் சவரம் செய்துகொண்டிருந்தாயே அதற்குள் எப்படி முடித்து வந்தாயென்று கேட்க சாமி நான் கும்பிட்டதற்கு நீங்கள் வாப்பா என்றீர்கள். என்னைத்தான் நீங்கள் கூப்பிட்டீர்கள் என்று நினைத்துவந்தேன். என்றான். 
ஏண்டா மடையா,பாதிசவரத்தில் விட்டுவரச்சொல்லி எவனாவது கூப்பிடுவானா கூப்பிட்டால் நீதான் வரலாமா சீக்கிரம் ஓடிச்சவரத்தை முடி என்றுரைத்தார்.
நாவிதன் நாம் இங்குவந்து வெகு நேரமாகிவிட்டது இனிமேல் அங்கு போனால் அடிவிழும் என்று பயந்து வாழிபுல்லாக்கவுண்டரிடம் போகாமல் தன் வீட்டிற்குப் போய்விட்டான். 
மறுநாள் தலைவன் நாவிதனைக்கூப்பிட்டு வாழிபுல்லாக்கவுண்டருக்குச் சவரம் நேற்றுச்செய்தாயா என்றுகேட்க அவன் இல்லிங்க சாமி என்றான். பின்யார் பாக்கிச்சவரம் செய்துஇருப்பார்கள் இதை அறிந்துவருவோமென்று தானே வாழிபுல்லாக்கவுண்டன் வீட்டிற்கு வந்தார். ஊர்த்தலைவனான வேட்டுவக்கவுண்டனை உபசரித்தார். ஏன் கவுண்டரே நேற்று நாவிதன் பாதி சவரத்தில் உங்களை விட்டுட்டு என் தோட்டத்திற்கு வந்துவிட்டானே. மீதிச்சவரத்தை செய்தது யார் என்று கேட்க என் மூத்தமகன் நல்லதம்பிக்கவுண்டன் தான் செய்தான். 
நீ ஊர்த்தலைவன் என்ற கர்வத்தினால்தானே நாவிதனைப் பாதிசவரத்தில் விட்டு வரும்படி சொன்னாய் இனிமேல் இந்த நாவிதன் எங்கள் வேளாளவமிசத்திற்கே வேண்டாமென்று கோபமாய்க் கூறினார். அப்படியானல் எங்கள் வேட்டுவவமிசத்திற்கும் வேண்டாம்
உங்கள் மகனே சவரத்தொழில் செய்யட்டும் என்றார். 
இச்சொல்லைக் கேட்ட வாழிபுல்லாக்கவுண்டன் ஆத்திரமும் கோபமும்கொண்டு என்னசொன்னாய் ஊர்த்தலைவனே என் மகனா! உன்வம்சத்தவர்களுக்குச் சவரம்செய்வது, என்வீட்டுநாய்கூட உன்வீட்டு நீரைக்குடிக்காது தெரியுமா என்றுரைத்தார். 
உங்கள் வீட்டுநாய் என்வீட்டில் அன்னம்புசித்தால் உங்கள் மகன் எங்கள் வம்சத்தவர்களுக்கும் சவரத்தொழில் செய்யயட்டும்.
அன்னம்புசியாவிட்டால் வேண்டாமென்றான் தலைவன், வாழிபுல்லாக்கவுண்டரும். சரி என்று ஒப்புக்கொண்டார்.
ஊர்த்தலைவன் கொங்கு இருபத்துநான்கு நாட்டிலேயும் உள்ள வேளாளப் பெருந்தகையோர்களுக்கு இவ்விஸியத்தை ஓலையில் எழுதி அதில் ஒருதேதி குறித்து எல்லாரையும் வரும்படி எழுதியிருந்தார். குறித்த நாளையில் எல்லாரும் வந்து சேர்ந்தார்கள் தலைவன் பெரிய கொட்டகைபோட்டு வந்த பிரமுகர்கள் அனைவரும் சாப்பிடுவதற்காக ஆயிரம் இலைகளுக்குமேல் போட்டுக்காய்கறி பதார்த்தங்களும், பலவகையான பலகாரங்களும் பறிமாறிவைத்துவிட்டு வாழிபுல்லாக்கவுண்டனிடம் ஊர்த்தலைவன் சென்று கவுண்டரே நீங்கள் அன்று கூறியபடி உங்கள் நாயைக் கூட்டிவந்து என்வீட்டுக் கொட்டகையில் பறிமாறி இருக்கும் இலைகளின் முன்னிலையில் விடுங்கள் பார்க்கலாம். வேளாளப்பெருமக்கள் அனைவரும் வந்திருக்கிறர்கள். அவர்கள் இதற்குமுடிவு 
சொல்லட்டும் என்றார்.
உடனே வாழிக்கவுண்டன் குளித்துவந்து கணபதியை நினைத்து விபூதியணிந்து சிறதுநேரம் கண்மூடி ஸோத்ரம் சொல்லியபின் தன்நாயைக் கயிற்றில்கட்டி பிடித்துக்கொண்டு ஊர்த்தலைவன் வீட்டுப்பந்தலுக்கு வந்தார். அங்கு நின்றுகொண்டிருக்கும் இருபத்திநான்கு நாட்டுப்பட்டக்காரர்களுக்கும் வணக்கம் செலுத்திவிட்டு பகவானை நினைத்துதுதிக்கலானார். ஆனைமுகத்தனே, ஐந்துகரனே, அகிலமெல்லாமிருப்பவனே , அடியேன்வம்சம் உன்அப்பன் அருளினால், ஆதி நாளையில் பூவுலகில் கங்கையிடம் உற்பத்தியாகி விருத்தியடைந்தது. உண்மையானால் என்நாய் இந்த வேட்டுவக்கவுண்டன் வீட்டுவிருந்து இலையில் அன்னம் புசியாதிருக்க வேண்டுமென்று கூறித்துதித்துவிட்டுத் தன்நாயை அந்த இலையின் முன் அவிழ்த்துவிட்டார்
நாயானது எல்லா இலைகளையும் முகர்ந்து பார்த்துவிட்டுக் கடைசி இலையின்மேல் காலைத்தூக்கி மூத்திரம் விட்டுவிட்டு வாலையாட்டிக்கொண்டு வந்து தன் எஜமானனிடம் நின்றது. உடனே கவுண்டன் அங்குவந்திருந்த வேளாளப் பெரியோர்களிடம், தனக்கும் ஊர்த்தலைவனுக்கும் நிகழ்ந்த விஸியத்தைக் கூறி இதற்குத் தீர்ப்புக் கூறுங்கள் என்றார். 
எல்லோரும் இனிமேல் நம்முடைய வம்சத்தவர்களுக்கு வேட்டுவநாவிதன் வேண்டாமென்று ஏகமனதாகத் தீர்மானித்தார்கள். அப்போது வாழிபுல்லாக்கவுண்டன் என்மகன் நால்வரில் இருவர் இத்தொழில் புரியட்டும் என்றார். அக்காலையில் ஒருவர் இவ்விருவருக்கும் பெண்யார் கொடுப்பார்கள் என்று கூற, அங்கு வந்திருந்த வெள்ளாஞ்செட்டிகளில் சிலர் நாங்கள் எங்கள் பெண்களைத் தருகிறோம் எங்கள்வமிசத்தவர்களுக்கும் சவரத்தொழில் புரியும் குடிமகனாய் இவர்கள் இருக்கவேண்டுமென்று கேட்டுக் கொண்டார்கள்.
அவர்களும் சரி என்று கூறி நன்னாளில் நல்லதம்பிக்குச் செட்டிப்பெண் நல்லாத்தாளையும், அவன் தம்பி சின்னத்தம்பிக்கு சின்னாத்தாளையும் மணமுடித்து வைத்தார்கள். இச்செட்டிமார்களைத்தான் வெள்ளாஞ் செட்டியார்கள் என்கிறோம். இவர்களுக்குச் சகல சீர் சிறப்புகளும் மாங்கலியம் முதலியவைகளும் வேளாள வம்சத்தைப் போன்றவைகளாகும். 
கொங்கு இருபத்திநான்கு நாட்டில் உள்ள வேளாளப் பெருமக்களுக்கு இவர்கள் இருவருமே எவ்வாறு சவரத் தொழில் புரிய முடியுமென என்று சிலர் கூற அப்போது அங்கு வந்திருந்த அறுபது குலக்காணியார்களில் அனேகம்பேர் நாங்களும் இத்தொழில் செய்கின்றோம் என முன்வந்தார்கள். 
அக்காலையில் பிரிந்துவந்ததால்தான் இன்று இக்குடிமகன் குலத்திலும் நம்மைப் போலவே அறுபது கோத்திரங்கள் இருக்கின்றன.
நமது காணிகளில் சிலவற்றில் இவர்களுக்கும் பாத்தியமிருக்கிறது.  
இவர்களுக்குச் சகல சீர்சிறப்புகளும் வேளாளவம்சத்தைப் போன்றே. நம்வீட்டு அருமைப் பெரியவர்களே குடிமகனுடைய வீட்டுக்கல்யாணங்களில் அருகுமணம் எடுக்கிறார்கள். இன்று வேளாளவம்சத்தவர்களே வேட்டுவமக்கள் வீட்டில் நட்புபாராட்டி சாப்பிடுகிறார்கள். ஆனால் நம்குடிமகனோ அன்றுதொட்டு இன்றுவரையில் வேட்டுவர் வீடுகளில் சாப்பிடுவதோ, நீர்குடிப்பதோ இல்லை, நம்முன்னோர்கள் தாங்கள் வைத்த குடியென்று கருதி கல்யாணங்களில் பெண்வீட்டுச் சீர் இரண்டுக்கும் இரண்டுவள்ள அரிசியும் மாப்பிள்ளைவீட்டுச்சீர் மூன்றுக்கு மூன்றுவள்ள அரிசியும் கொடுக்கிறார்கள். அவரவர் தங்களுக்கு முடிந்த அளவு பிரியம்போல கொடுக்கிறார்கள்.



கொங்க நாவிதர்களின் நித்திய கடன்கள் சில:

 

கொங்கநாவிதர்களுக்கு மங்கலன் என்ற பெயரும் உண்டு. பிறப்பு முதல் இறப்பு வரை அனைத்து சீர்களும் கொங்க நாவிதர்களே செய்கின்றனர். 
கொங்க வெள்ளாளர்களின் கல்யாணங்களில் மங்கல வாழ்த்து பாடும் உரிமை அவர்களுக்கே உண்டு. 
நாவிதர் வாழ்த்து பாடினாத்தான் அது கல்யாணம் அவர்கள் மங்கல வாழ்த்து பாடலைனா அதை ஒருகல்யாணம்னே ஏத்துக்க மாட்டாங்க. 

http://mangalavazhthu.blogspot.in/

அதேபோல வீட்டில் யாராவது இறந்துவிட்டால் நாவிதர் வந்து உரிய சடங்குகளை செஞ்சால்தான் காரியங்களுக்கு எடுத்துட்டுப் போகமுடியும்.
இன்று நாவிதர்களை ஏதோ முடிவெட்டுபவர்களாக மட்டுமே பார்க்கிறோம். அது தவறு. நமது தாத்தா காலம் வரை ஆண்,பெண் என எல்லோருமே குடுமிதான் வெச்சிருப்பாங்க முடிவெட்டும்வழக்கம் கிடையாது. முகச்சவரம் மட்டுமே செய்வார்கள். பிற்பாடு வெள்ளக்காரன் காலத்திலேதான் இந்த கிராப் முடிவெட்டும் பழக்கம் வந்தது. 
நாவிதர்கள் நாட்டு மருத்துவர்களாக இருந்திருக்காங்க. அறுவை சிகிச்சை கூட பண்ணியிருக்காங்க. 
நாவித பெண்கள் மருத்துவச்சியாக இருந்து பிரசவம் பார்ப்பார்கள்.
நோய்தடுக்க எண்ணை தேய்த்தல் விடுதல் , உடல் உஷ்ணத்தை சமன்படுத்த புளிகரைத்து குடல் சுக்ரம் செய்தல்.